Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

தெலுங்கு சினிமா என் முதல் முகவரி: 'கப்பர் சிங்' நினைவுகளைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

By VASUKI
11 Jul 2025, 01:48 PM
தெலுங்கு சினிமா தான் என்னுடைய முதல் முகவரி என்று பவன்கல்யாணின் ‘கப்பர் சிங்’ திரைப்படம் தான் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
திரைப்பட உலகில், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திரைப்படம் திருப்புமுனையாக அமையும். அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு, தெலுங்கு சினிமாவில் பவன்கல்யாணின் ‘கப்பர் சிங்’ திரைப்படம் தான் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் தனக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தந்தது மறக்க முடியாதது என்றும் கூறுகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ருதி ஹாசன், “பவன் கல்யாண் சாருடன் நடித்த ‘கப்பர் சிங்’ திரைப்படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம். ஹரிஷ் ஷங்கர் சார் என்னை நம்பி அந்த வாய்ப்பை கொடுத்தார். அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பவன் கல்யாண் அவர்களின் எளிமை மற்றும் அடக்கமான குணத்தை ஸ்ருதி ஹாசன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் அரசியலுக்கு வருவார் என்று சற்றும் நினைக்கவில்லை என்றும், ஆனால், அவரது கிராமப்புற மற்றும் விவசாய பின்னணி எப்போதும் அவரை மக்களுடன் இணைந்திருக்க வைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பவன் கல்யாண் அரசியலுக்கு வந்தது, மக்கள் மீது அவர் வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது ரஜினிகாந்த் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசன் திரைப்படங்களைத் தாண்டி, சமூக நலனிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற விஷயங்களில் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்.