Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

வீரமே ஜெயம்.. ஜப்பானில் மாவீரன்: சிவகார்த்திகேயன் வீடியோ வைரல்!

By MUTHUKRISHNAN
10 Jul 2025, 05:34 PM
ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான “மாவீரன்” திரைப்படம் நாளை (ஜூலை 11) ஆம் தேதி ஜப்பானில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி திரையில் வெளியாகிய திரைப்படம் ‘மாவீரன்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு வெகுவாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருந்தது. அதற்கு காரணம், தனது வழக்கமான காமெடி ஜானருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு அதிகம் பேசாமல் சைலண்ட் மோடில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தது மட்டுமின்றி அதை சிறப்பாகவும் செய்திருந்தார்.

யோகி பாபுவினை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ’மண்டேலா’ திரைப்படத்தினை இயக்கியிருந்த மடோன் அஸ்வின் 'மாவீரன்' திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு முன்பு சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகிய 'பிரின்ஸ்' எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், 'மாவீரன்' சிவகார்த்திகேயனுக்கு சொல்லிக்கொள்ளும் படி ஒரு வெற்றி படமாக அமைந்தது.

'மாவீரன்' ஒரு ஃபேன்டஸி கலந்த சமூக-அரசியல் பேசக்கூடிய ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியானது. படத்தின் நாயகன் சத்யா (சிவகார்த்திகேயன்) ஒரு பயந்த சுபாவமுள்ள கார்ட்டூனிஸ்ட். தன் தாய் (சரிதா) மற்றும் தங்கை (மோனிஷா) உடன் குடிசைப் பகுதியில் வசித்து வரும் சத்யா, நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்கிறார். ஆனால், அந்தக் குடியிருப்பு தரமற்ற கட்டுமானத்துடன் கட்டப்பட்டது என்பதை அறிந்ததும், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

இந்தச் சூழலில், சத்யாவுக்கு வானத்திலிருந்து ஒரு குரல் (விஜய் சேதுபதியின் குரல்) கேட்கிறது. அந்தக் குரல், சத்யாவைத் துணிச்சலான நபராக மாற்றுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது தான் மாவீரன் படத்தின் கதை. விஜய் சேதுபதி தன் குரலால் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தார். இயக்குநர் மிஷ்கினின் நடிப்பும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றது.

இந்நிலையில் கிட்டத்தட்ட மாவீரன் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெறும் சூழலில், நாளை இப்படம் ஜப்பானில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இதுத்தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.