நடிகர் ரணவீர் சிங் நடிப்பில் வெளியாகி, இந்தியில் வசூல் சாதனை செய்து வரும் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படத்திற்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையும் காரணமும்
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) என ஆறு முக்கிய வளைகுடா நாடுகளிலும் இந்தப் படம் வெளியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளை கொண்டுள்ளதாகக் கூறி, அந்நாட்டு அதிகாரிகள் படத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
பாலிவுட் படங்களுக்கு வளைகுடா நாடுகள் முக்கியமான சந்தை என்றாலும், எல்லைப் பிரச்னைகளைப் பேசும் 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற பல இந்தியப் படங்களுக்கு ஏற்கனவே இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வரவேற்பு
வளைகுடா நாடுகளின் தடைகளை தாண்டி, 'துரந்தர்' இந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் ரூ.200 கோடி நிகர வசூலைத் தாண்டியுள்ளது. வளைகுடாவைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து மட்டும் ரூ.44.5 கோடி வசூலாகியுள்ளது.
இந்தப் படத்தை 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய ஆதித்யா தார் இயக்கியுள்ளார். இந்தப் படம், பாகிஸ்தானில் நடந்த 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத் துறையின் (R&AW) ரகசிய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று இயக்குநர் கூறியுள்ளார். ரணவீர் சிங்குடன் சஞ்சய் தத், ஆர். மாதவன் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.