Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

ரஜினியுடன் இணைந்து பணியாற்ற ஆசை.. இளையராஜாவுக்கு எந்த அவமதிப்பும் நடக்கவில்லை- தேவா

By nagalekshmi
23 Dec 2024, 02:19 PM
ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை என்றும் அதனை அவரும் கூறியிருந்தார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

மதுரையில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி (Live in concert) வருகின்ற ஜனவரி 18-ஆம் தேதி ஒத்தக்கடை அருகே உள்ள வேலம்மாள் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம் இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது பாடல் "வராரு வராரு அழகர் வாராரு” என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை  கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்தார் அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த இசைக்கச்சேரியை 60 பேர் கொண்ட இசைக் குழுவினருடன்  இணைந்து  நடத்த உள்ளேன். 5 முதல் 6 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. காலம் கடந்து எனது இசையும், ராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன். எனக்கு அனிருத் ரொம்ப பிடிக்கும் அவர் லேட்டஸ்ட் ஆக ஸ்பீடாக இருக்கிறார். எனக்கு நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பண்ண விருப்பமில்லை. இசையமைக்கும் வேலையை அதிகம் இருப்பதால்  நடிக்க விரும்பவில்லை.

தற்போது இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு இசை பிடிக்கவில்லை என்றால் தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம். ஹைதராபாத்தில் புஸ்பா-2 படத்தின் போது அல்லு அர்ஜுனை காண சென்றபோது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதஷ்டவசமானது அது குறித்து தெரியாது என்று கூறினார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பு நடைபெறவில்லை, அதனை அவரும் கூறியிருக்கிறார்.  அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன். இப்போது  உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கின்றார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு எதுவும் கிடையாது. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளம் இசையமைப்பாளர்கள் பணத்தை சேமித்து வைத்து வரும் காலத்திற்கு சேவையாற்ற வேண்டும்.  

எனது பாடல் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன்.  மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன். அந்த ஆசை எனக்கு இருக்கிறது அதற்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.