Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Actor Vimal: 5 கோடி கடன் விவகாரம்... ‘மன்னர் வகையறா’ ஹீரோ விமலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Kalandhai
30 Aug 2024, 02:47 AM
நடிகர் விமல் படத் தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் அறிமுகமான விமல், விஜய்யுடன் கில்லி, குருவி, அஜித்துடன் கிரீடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான பின்னர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் விமல். இதனைத் தொடர்ந்து வெளியான களவாணி, விமலுக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது. இந்தப் படம் வெளியானது முதல் பக்கா கிராமத்து ஹீரோ மெட்டீரியலாக வலம் வரத் தொடங்கினார் விமல். இதனால் அவருக்கு தொடர்ந்து பல மினிமம் பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

அதன்படி, தூங்கா நகரம், வாகை சூட வா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, புலிவால், மஞ்சப்பை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் போன்ற படங்களில் விமல் நடித்திருந்தார். ஆனாலும் விமலால் சிவகார்த்திகேயன் அளவிற்கு கோலிவுட்டின் லீடிங் ஹீரோவாக முடியவில்லை. அதேநேரம் சொந்தமாக படத் தயாரிப்பில் இறங்கிய விமலுக்கு அதன்பின்னர் சோதனை காலம் தான். விமல் ஹீரோவாக நடித்த மன்னர் வகையறா படத்தை அவரே சொந்தமாக தயாரித்திருந்தார்.  

பூபதி பாண்டியன் இயக்கிய இந்தப் படம் 2018ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. விமலுடன் ஆனந்தி, பிரபு, ரோபோ சங்கர், ஜெயபிரகாஷ், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. அதேநேரம் இப்படத்தின் தயாரிப்புக்காக விமல் கடன் வாங்கியது அவரை இப்போது வரை விடாது கருப்புவாக விரட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது, மன்னர் வகையறா படத்திற்காக அரசு பிலிம்ஸ் கோபி என்பவரிடம் 5 கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார் விமல். 

மேலும் படிக்க - வெற்றிமாறனின் விடுதலை 2 ரிலீஸ் தேதி!

அப்போது, மன்னர் வகையறா வெளியாகும் நேரத்தில் இந்த கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறியுள்ளார். ஆனால், விமல் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் 2020ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி. இதற்கு எதிராக கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி புகார் கொடுத்திருந்தார் விமல். அதனால் இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சென்றது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணையின் முடிவில், விமல், கோபிக்கு இடையே சமரசம் ஏற்பட்டது. 

மேலும், 2021 செப்டம்பர் மாதத்திற்குள் 3 கோடியை திருப்பித் தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்துகொடுத்துள்ளார். ஆனால், ஓராண்டு கடந்தும் பணம் வராததால் 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபி. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி நடிகர் விமல் 3 கோடி ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.