சினிமா

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் 'கருப்பு': தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல்!

By Christon
22 May 2026, 04:59 PM
சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கருப்பு' திரைப்படம், வெளியான ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. உலகளவில் இப்படம் 207 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக நேற்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழகத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தைத் தமிழக விநியோகஸ்தர் வெளியிட்டுள்ளார். வெளியீட்டிற்கு முன்பாக சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான நிதிச் சிக்கலில் இருந்த இப்படம், திட்டமிட்டபடி மே 14-ஆம் தேதி வெளியாகாமல், சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு மறுநாள் மே 15 அன்றுதான் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் முதல் 100 கோடி மைல்கல்

நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்திருந்த நடிகர் சூர்யாவுக்கு இப்படம் மெகா பிளாக்பாஸ்டர் வெற்றியாக அமைந்துள்ளது. அவரது திரைப்பயணத்திலேயே தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலையும், உலகளவில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலையும் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை 'கருப்பு' பெற்றுள்ளது.

தொடரும் வசூல் வேட்டை

நிதி நெருக்கடிகளைக் கடந்து வெளியான போதிலும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரமும் புதிய பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால், திரையரங்குகளில் இப்படத்திற்கான வரவேற்பும் வசூலும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.