சினிமா

ஆறாவது நாளில் கங்குவா வசூல் இவ்வளவா..? அதிர்ச்சியில் படக்குழு

By Kumudam News
21 Nov 2024, 06:25 AM
ஆறாவது நாளில் ’கங்குவா’ திரைப்படத்தின் வசூல் 69 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 42-வது படமான ‘கங்குவா’ படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி இணைந்திருந்தார். மேலும், பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியன், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு ஆகிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஸ்டுடியோ கிரீன் தாயாரிப்பில் உருவான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் படங்களில் ‘கங்குவா’ திரைப்படமும் ஒன்று. இப்படம் ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்டது. 

இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி இப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்தனர். தமிழ் சினிமாவில் உருவான பிரம்மாண்ட திரைப்படமாக ‘கங்குவா’ இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. நெட்டிசன்கள் பலர் ‘கங்குவா’ படம் குறித்து பல்வேறு கருத்துகளை சமூக வலைதளத்தில் முன் வைத்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா, இயக்குநர் சுசீந்திரன் உட்பட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

என்னதான் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் ’கங்குவா’ திரைப்படம்  முதல் நாளில் உலகம் முழுவதும் 58 கோடியே 62 லட்ச ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த வசூலானது தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இரண்டாது நாளில் 9 கோடியே 5 லட்சமும், மூன்றாவது நாளில் 9 கோடியே 85 லட்சம் என குறைந்து ஆறாவது நாளில் 3 கோடியே 15 லட்சம் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. ’கங்குவா’ படத்தின் வசூலானது ஆறாவது நாளில் முதல் நாளை விட 69 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமே யூடியூபர்கள் தான் என்றும், அவர்களின் மோசமான விமர்சனத்தால் தான் இப்படத்தின் வசூல் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.