சினிமா

5 நாளில் தமிழக வசூல் இத்தனைக்கோடியா? வசூல் வேட்டையில் குட் பேட் அக்லி!

By VASUKI
15 Apr 2025, 09:14 PM
அஜித்தின் குட் பேட் அக்லி படம் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை அஜித்தின் ரசிகர்கள் தரமான ஃபேன் பாய் சம்பவம் என்று குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தில், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால், திரைப்படத்தில் நொடிக்கு நொடி அஜித்தின் ரசிகனாகவே திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித் இதுபோன்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிக்காட்டி உள்ளதாகவும், அஜித் ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமைந்த இந்த திரைப்படம், கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளதாகவும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று காலையில் வெளிவந்த தகவலில் கடந்த 5 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 170 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. தொடர் விடுமுறை என்பதால், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குட்பேட் அக்லி திரைப்பாம் வெளியான போது, வேறு முக்கிய திரைப்படம் வெளியாகாததால், மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு அஜித் நடித்து வெளிவந்த 'விஸ்வாசம்' படம் 3 நாட்களில் 100 கோடி வசூலித்தது. 'நேர் கொண்ட பார்வை' 6 நாட்களில் 100 கோடி வசூலித்த நிலையில், தற்போது 'குட் பேட் அக்லி' மிக விரைவாக ரூ.100 கோடி வசூலைப் பெற்ற அஜித் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.



குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மாறுபட்ட, கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் இத்திரைப்படம் வியாபார ரீதியாக வசூலைப் பெற்றிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.