சினிமா

'வா வாத்தியார்' படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Christon
04 Dec 2025, 01:45 PM
'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவாலான ஒரு நபரிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படம் மற்றும் திட்டமிடப்பட்ட வெளியீடு

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது.

கடன் பிரச்னை மற்றும் சொத்தாட்சியர் மனு

சென்னை உயர் நீதிமன்றச் சொத்தாட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் 2014-ம் ஆண்டு திவாலானவர் என அறிவிக்கப்பட்டு, அவரது சொத்துக்களை நிர்வகிக்கச் சொத்தாட்சியர் நியமிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் பெற்றிருந்ததாகவும், அந்தக் கடன் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தொகையைச் செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர் தயாரித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் வெளியிட இடைக்காலத் தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அமர்வு, 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.