சினிமா

'என் சாவுக்கு காரணம் இவர் தான்'.. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் மீது இன்ஸ்டா பிரபலம் புகார்

By MUTHUKRISHNAN
24 Jul 2025, 08:05 PM
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் மாஸ்டர்களில் மிகவும் புகழ்பெற்ற சண்டைக்காட்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன். இவரது மகன் தான் திலீப் சுப்பராயன். தனது தந்தையினை போன்று ஸ்டண்ட் மாஸ்டராக திரையில் கால் பதித்தவர், படங்களை தயாரித்தும் நடித்தும் உள்ளார்.

தமிழில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என அனைத்து முன்னணி நாயகர்களின் படங்களிலும் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார் தீலிப் சுப்பராயன். ஆரண்ய காண்டம் படத்தில் இவரது பணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு சிறந்த சண்டைக்காட்சி இயக்குநருக்கான விருதுகளையும் இப்படத்திற்காக வென்றார்.

தமிழ் சினிமா தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் சண்டைக்காட்சி இயக்குநராக பணிப்புரிந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலா என்கிற திரைப்படத்தின் வாயிலாக தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்தார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பிரபலமான நபராக திகழும் இலக்கியா, திலீப் சுப்பராயன் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வைத்துள்ள ஸ்டோரியில், “என்னோட சாவுக்கு சண்டைக்காட்சி இயக்குநர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். 6 வருடமாக நான் அவருடன் இருந்துள்ளேன். நிறைய பெண்களுடன் அவருக்கு பழக்கம். அதை எதிர்த்து கேட்டால் என்னை அடிக்கிறார். இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் இலக்கிய ராஜேந்திரனின் பக்கத்தினை சுமார் 1.6 மில்லியன் நபர்கள் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 என்ற எண்களை அழைக்கலாம்)