சினிமா

“என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்” –இளையராஜா அதிரடி

By Jayakumar
10 May 2025, 05:12 PM
சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என இளையராஜா பதிவு
இந்தியா-பாக்.போர் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கி வருகிறது.

இதை அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் ராணுவ கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் செயலை வரவேற்கும் வகையில், தேசிய பாதுகாப்பு நிதிக்கு நிதியுதவி அளிக்கப்படும் என இளையராஜா அறிவித்துள்ளார்.

இளையராஜா நிதியுதவி

இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் எனது முதல் சிம்பொனியை இயற்றி, அதற்கு 'Valiant' [வீர மிக்கவர்] என்று பெயரிட்டேன். ஆனால், அந்த சொல்லிற்கு ஏற்ப மே மாதத்தில் நமது ராணுவ வீரர்கள் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் படுகொலையை எதிர்த்து எல்லைகளில் தைரியத்துடனும், உறுதியுடனும் செயல்பட வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியாது. நமது சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

ஒரு பெருமைமிகு இந்தியராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும், மக்களையும் பாதுகாக்கவும் நமது ராணுவ வீரர்களின் முயற்சிகளுக்காக எனது 'valiant' இசைக்கச்சேரி மூலம் கிடைத்த கட்டணத் தொகை, மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான என்னுடைய ஒரு மாத சம்பளத்தை 'தேசிய பாதுகாப்பு நிதி'க்கு வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்!" என தெரிவித்துள்ளார்.