Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

கேரவனுக்குள் சில்மிஷம்? 'பளார்' விட்ட நடிகை பூஜா ஹெக்டே!

By Christon
19 Jan 2026, 04:29 PM
கேரவனில் தன்னிட்டம் தவறாக நடக்க முயன்ற நடிகர் பிரபாஸ் கன்னத்தில் பளார் விட்டதாக பூஜா ஹெக்டே கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சினிமா பிரபலங்கள் குறித்துப் பல்வேறு செய்திகள் பரவுவது வழக்கம். அந்த வகையில், தற்போது பான் இந்திய நட்சத்திரமான நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகியோரைத் தொடர்புபடுத்தி ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தீயாய் பரவி வருகிறது.

பரபரப்பைக் கிளப்பிய 'கேரவன்' சம்பவம்

சமூக வலைதளங்களில் உலா வரும் அந்தச் செய்தியில், பூஜா ஹெக்டே ஒரு பேட்டியில் கூறியதாக ஒரு தகவல் இடம்பெற்றுள்ளது. அதில், "சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தின் கதாநாயகன் எனது அனுமதியின்றி கேரவனுக்குள் நுழைந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த நான், உடனடியாக அவரைத் தடுக்க அவர் கன்னத்தில் அறைந்தேன். அதன் பிறகு அந்த நடிகர் என்னுடன் நடிக்க விரும்பவில்லை" என்று பூஜா ஹெக்டே வருத்தத்துடன் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்காகும் 'ராதே ஷ்யாம்' திரைப்படம்

பூஜா ஹெக்டேவும் பிரபாஸும் இணைந்து 'ராதே ஷ்யாம்' என்ற படத்தில் நடித்திருந்தனர். அந்தச் செய்தியில் நடிகர் பிரபாஸின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பூஜா ஹெக்டே குறிப்பிட்ட அந்தப் பான் இந்திய நடிகர் பிரபாஸ் தான் என்றும், இச்சம்பவம் 'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பின் போதுதான் நடந்தது என்றும் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை நிலவரம் என்ன?

இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவி வந்தாலும், இது முற்றிலும் போலியான தகவல் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நடிகை பூஜா ஹெக்டே தரப்பில் இருந்தோ அல்லது நடிகர் பிரபாஸ் தரப்பில் இருந்தோ இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வ மறுப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்றே கூறப்படுகிறது.