Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

சிம்பு பட நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்.. வலுக்கும் கண்டனம்!

By Christon
18 Dec 2025, 01:59 PM
ஹைதராபாத்தில் நடைபெற்ற சினிமா ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை நிதி அகர்வால் ரசிகர் கூட்டத்தில் சிக்கி, அத்துமீறிய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த நடிகை நிதி அகர்வால், ரசிகர் கூட்டத்தில் சிக்கி அத்துமீறலுக்கு உள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளிடம் பொது இடங்களில் ரசிகர்கள் அத்துமீறுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி அகர்வால் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சம்பவமும் நடிகையின் வேதனையும்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் 'சஹானா சஹானா' பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிகை நிதி அகர்வாலும் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நிதி அகர்வால் கலந்துகொண்டபோது, அரங்கில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் அங்கிருந்து கிளம்பியபோது, கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவரைத் தள்ளியும், அநாகரிகமாகத் தொட்டும் அத்துமீறிய செயலில் ஈடுபட்டனர்.

இதை உடனடியாகக் கண்ட அவரது பாதுகாவலர்கள், நடிகை நிதி அகர்வாலைக் கூட்டத்திலிருந்து மீட்டு அவசரமாகக் காரில் ஏற்றினர். காரில் ஏறிய நிதி அகர்வால் சிறிது நேரம் முகத்தை மூடியபடி அமர்ந்து வேதனையடைந்த இந்தக் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.




பாதுகாப்புக் குறைபாடும் கண்டனங்களும்

இந்தச் சம்பவம் ஒரு பெரிய பாதுகாப்புக் குறைபாட்டை எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் கூட்டம் கூடுவதற்கான எந்த அனுமதியையும் முறையாகப் பெறவில்லை என்பதைப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். நடிகை நிதி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறிய இந்தச் செயலுக்குத் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.