சினிமா

பிரபல சீரியல் நடிகை தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி!

By Christon
06 Apr 2026, 11:00 AM
பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அவர், குடும்பத் தகராறு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 36 வயதான நடிகை சுபாஷினி, பெங்களூரில் தனது கணவர் பிப்பினுடன் வசித்து வந்தார். படப்பிடிப்புகள் காரணமாகச் சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்பத் தகராறு காரணமா?

சுபாஷினி நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவர், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார், சுபாஷினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சின்னத்திரை மற்றும் சமூக வலைதளப் பிரபலம்

சுபாஷினி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கயல்' உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தவர். சின்னத்திரை மட்டுமின்றித் திரைப்படங்களிலும் கதாநாயகியாகப் பணியாற்றியுள்ள அவர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவரது திடீர் மறைவு அவரது சக கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.