சினிமா

தலைவர் - 173: 'கனத்த இதயத்துடன் விலகுகிறேன்'- இயக்குநர் சுந்தர்.சி அறிவிப்பு!

By Christon
13 Nov 2025, 04:24 PM
நடிகர் ரஜினியின் 173 திரைப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருந்த புதிய திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சுந்தர். சி-யின் விலகல் அறிக்கை

ரஜினிகாந்த் நடிப்பில், 2027 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்திலிருந்து விலகுவது குறித்து இயக்குநர் சுந்தர். சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தவிர்க்க முடியாத காரணங்களால் கனத்த இதயத்துடன் இப்படத்திலிருந்து விலகுகிறேன். நீண்ட காலம் கழித்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கியதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். அதேநேரம், நான் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்குகிறேன் என செய்தி வெளியானபோது உற்சாகமான ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூட்டணியில், இயக்குநர் சுந்தர். சி இணையும் அறிவிப்பு வெளியாகிச் சில நாட்களே ஆன நிலையில், அவர் எடுத்த இந்தத் திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர். சி ஏன் இந்த முடிவை எடுத்தார், அந்தத் தவிர்க்க முடியாத காரணங்கள் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.