சென்னை: தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவும் சமந்தாவும் முதன்முதலாக இணைந்து நடித்தனர். அப்போது முதல் காதலித்து வந்த இருவரும், 2017ம் ஆண்டு இருவீட்டார் குடும்பத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஆரம்பத்தில் இருவரது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க, திடீரென 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இச்சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதன்பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தா, மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக அதற்கும் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தான், நடிகை சோபிதா துலிபலா – நாக சைதன்யா இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆரம்பத்தில் இதுபற்றி நாக சைதன்யா அமைதிகாத்து வந்த நிலையில், ஆக.8ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என நாகர்ஜுனா கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இதனிடையே தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா பற்றி அவதூறாக பேசியது இன்னும் சர்ச்சையானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தனது கருத்தை வாபஸ் பெற்ற அமைச்சர் கொண்டா சுரேகா, மன்னிப்பும் கேட்டார். இந்த பரபரப்புகளுக்கு நடுவே நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமண ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருமண தேதி பற்றி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
திருமணத்திற்கு முந்தைய பூஜையில் பங்கேற்றுள்ள சோபிதா துலிபலா, ஹல்தி உட்பட மேலும் சில சடங்கு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். இவை அனைத்தும் சோபிதா துலிபலா வீட்டில் நடைபெற்றுள்ளதோடு, அவரே இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனால் தீபாவளிக்கு முன்னதாக நாக சைதன்யா – சோபிதா துலிபலா திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், வானதி கேரக்டரில் நடித்திருந்தார் சோபிதா.