Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Samantha: சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து... அந்த அரசியல் புள்ளி தான் காரணமா..? பதறிய டோலிவுட்!

By Kalandhai
03 Oct 2024, 09:35 PM
சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் டோலிவுட் நடிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷனால், சர்ச்சையாக பேசிய அமைச்சர் தனது கருத்தை வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து பான் இந்தியா அளவில் மாஸ் காட்டி வருகிறார் சமந்தா. இந்நிலையில், சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கொளுத்திப் போட்ட சர்ச்சை கருத்து, சமூக வலைத்தளங்களில் செம ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கொண்டா சுரேகா, சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகனும், பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் தான் காரணம் என சொல்ல, டோலிவுட்டே கொதித்துப் போயுள்ளது. 

ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே ஆட்டம் கண்டுள்ளது. அப்போது முதல் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டிலும் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன. இப்படியான பரபரப்பான சூழலில், சமந்தாவின் விவாகரத்துக்கு கே.டி ராமாராவ் தான் காரணம் என அமைச்சர் கொண்டா சுரேகா கூறியுள்ளார். அதாவது, போதைப் பொருட்கள் விநியோகம் செய்வதுதான் கே.டி ராமாராவின் வேலை, போதைக்கு அடிமையானவர்களை மிரட்டி அவர்களை அபகரித்துக் கொள்வார். இவரால் தான் நடிகைகள் சீக்கிரமே திருமணம் செய்துகொள்கின்றனர் எனக் கூறியிருந்தார்.

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, சமந்தா மீது கே.டி ராமாராவ் ஆசைப்பட்டதாகவும், அதற்கு சமந்தாவின் மாமனார் நாகர்ஜுனாவே சப்போர்ட் செய்ததாகவும் பேச, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஏற்கனவே சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். சமந்தா திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார். அதுவும் கவர்ச்சியாக நடித்ததால் தான் நாக சைதன்யா விவாகரத்து முடிவை எடுத்தார் என சொல்லப்படுகிறது. அதேபோல் நாக சைதன்யா சில நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் தான் சமந்தா விவாகரத்து செய்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. 

இப்போது அமைச்சர் கொண்டா சுரேகா புதிதாக ஒரு கதையை சொல்ல, இது அரசியல், சினிமா என இரண்டு வட்டாரத்திலும் புயலை கிளப்பியுள்ளது. அரசியல் லாபத்துக்காக திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையை விமர்சிப்பது தரம் தாழ்ந்த ஒன்று. இதுபோல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொன்னால், நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என பொங்கிவிட்டனர். இந்த சர்ச்சை குறித்து நாக சைதன்யா, சமந்தா இருவருமே தனித்தனியாக ரியாக்ட் செய்துள்ளனர். விவாகரத்து இரண்டு தனிப்பட்ட நபர்களின் வாழ்வில் எடுக்கப்படும் கடினமான முடிவு. இந்த விஷயத்தில் இப்படியொரு அபத்தமான கருத்துத் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் மனைவி சமந்தாவின் குடும்பத்துக்காகவே நான் அமைதியாக இருக்கிறேன் என ட்வீட் செய்திருந்தார்.

தனிநபர்களின் தனிப்பட்ட விஷயங்கள் மீது, மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும். விவாகரத்து எங்கள் இருவரது தனிப்பட்ட முடிவு, இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை என அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா. அடுத்தடுத்து பலரும் கண்டனம் தெரிவிக்க, தனது கருத்தை வாபஸ் வாங்கினார் அமைச்சர் கொண்டா சுரேகா. சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் ஒருபக்கம், அமைச்சர் தனது கருத்தை வாபஸ் வாங்கியது மறுபக்கம் இருந்தாலும், டோலிவுட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.