Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா?

By Christon
11 Mar 2026, 05:03 PM
பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.
மும்பையைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவிற்கும் நடிகை ஹன்சிகாவிற்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் மிகப்பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண நிகழ்வுகள் 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் ரியாலிட்டி நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ஜோடி, திருமணமான சில ஆண்டுகளிலேயே பிரிவைச் சந்தித்திருப்பது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீவனாம்சம் மறுத்த ஹன்சிகா

மும்பை பந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ஹன்சிகா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த விவாகரத்து விவகாரத்தில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனது கணவரிடமிருந்து எந்தவிதமான ஜீவனாம்சமோ (Alimony) அல்லது சொத்துக்களையோ கோரப்போவதில்லை என ஹன்சிகா முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னிச்சையாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவுக்கான பின்னணி

திருமணத்திற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2024 ஜூலை மாதம் முதல் இவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும், சுமூகமான தீர்வு எட்டப்படாததால் பிரிந்து செல்வதே சிறந்தது என இருவரும் முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது சட்டப்பூர்வமாக இருவரும் பிரிந்துள்ளனர்.