Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

'ஜனநாயகன்’ அவதாரம் எடுத்த விஜய்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By nagalekshmi
26 Jan 2025, 11:24 AM
நடிகர் விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்திற்கு ’ஜனநாயகன்’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது 69-வது படத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில்லை என்றும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து, விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்று பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.

விஜய் நடிக்கும் 69-வது படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குவார் என்று அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'விஜய் 69’ திரைப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: பத்ம பூஷன் விருது.. இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும்- அஜித் உருக்கம்

இப்படத்தின் அப்டேட் பொங்கலுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, நேற்று இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு இன்று (ஜன 26) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி, ‘விஜய் 69’ திரைப்படத்திற்கு ’ஜனநாயகன்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. 

நடிகர் விஜய் அரசியலில் குதித்தாலும் படங்களிலும் நடிக்கலாம் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் விஜய் தன் புகழை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே அரசியலுக்கு வருகிறார் என்று கூறுகின்றனர்.