Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு தீணிக் கொடுத்தாலும் பத்தாது- நடிகர் கார்த்தி புகழாரம்

By nagalekshmi
31 Mar 2025, 05:46 PM
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு எவ்வளவு தீணி கொடுத்தாலும் பத்தாது என்றும், அவர் கேட்டு கேட்டு நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கார்த்திக்,  எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.

கார்த்தி புகழாரம்

இந்நிலையில், ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது, “ 'சர்தார்’ பெயர் வைத்ததில் இருந்து அதன் மீது தனியாக ஒரு அன்பு இருக்கிறது. ’சர்தார்’ திரைப்படத்தில் மிகவும் பயங்கரமான ஒரு விஷயம் இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய போரை பற்றி பேசுகிறது.

ஹீரோ வலிமையாக இருக்க வேண்டும் என்றால் வில்லனும் வலிமையாக இருக்க வேண்டும். இந்த போர் பெரிதாக இருக்க வேண்டும் என்றால் இரு துருவங்களும் பெரிதாக இருக்க வேண்டும். எப்போதும் மித்ரனுக்கு ஒரு வழக்கம் இருக்கிறது Flash back தான் முதலில் எடுப்பார்.  Flash back படப்பிடிப்பை பார்த்ததும் பயந்துவிட்டேன்.

தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன். இந்த படத்தில் ஒவ்வொரு படப்பிடிப்பு அரங்கமும் மிகவும் பயங்கரமாக இருந்தது. நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு எவ்வளவு தீணி கொடுத்தாலும் பத்தாது. கேட்டு கேட்டு அவர் செய்வது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் நாங்கள் செல்போன்களை எடுக்கவேமாட்டோம். அவரிடம் பேசுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று பேசினார்.