சினிமா

வெளிநாடுகளில் வசூலை குவிக்கும் ‘குட் பேட் அக்லி’.. உற்சாகத்தில் படக்குழு

By nagalekshmi
11 Apr 2025, 06:05 PM
அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக வசூலை குவித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.இந்த திரைப்படத்தில் திரிஷா, ரெடின் கிங்ஸ்லி, பிரசன்னா, யோகிபாபு, பிரியா வாரியர், சிம்ரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் நேற்று(ஏப்.10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸையொட்டி அஜித் ரசிகர்கள் அவரது பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, தமிழ்நாட்டில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு வெளியானது. இப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த ஆதிக் ரவிச்சந்திரன் திரையரங்கில் தரையில் இருந்து படம் பார்த்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

அதுமட்டுமல்லாமல், 'குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸை நடிகர் ஷைன் டாம், ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ரசிகர்களின் அமோக வரவேற்புடன் வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

வசூல்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த அஜித் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை படகுழு சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.