சினிமா

நடிகர் நெப்போலியன் மகன் குறித்து வதந்தி.. நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

By nagalekshmi
21 Apr 2025, 01:22 PM
நடிகர் நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
80 காலக்கட்டத்தில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் தமிழில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் இருந்தார். திமுக-வுடன் இணைந்து தேர்தலில் நின்று எம்.பி.யாக வெற்றி பெற்றார். பின்னர் சில காரணங்களுக்காக அவற்றை விட்டு விட்டு வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அவரது மனைவி அக்ஷயா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் திமுக எம்.பியும், நடிகருமான நெப்போலியன் மகன் தனுஷ் பிறவியிலேயே தசை சிதைவு குறைபாடு காரணமாக வீரவநல்லூரில் உள்ள மயோபதி காப்பகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

சமீபத்தில் அவருக்கும் அக்ஷயா என்பவருக்கும் ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்கள் இருவர் குறித்தும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் அவ்வாறு பரப்புபவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மயோபதி காப்பக ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் ஆகியோர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.