சினிமா

ஆகாச வீரன்.. ‘தலைவன் தலைவி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

By Christon
13 Jul 2025, 08:12 AM
‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 52-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தலைவன் தலைவி' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் வரும் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக 19(1)(ஏ) என்ற மலையாள படத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் இணைத்து நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் யோகிபாபு, தீபா சங்கர், சரவணன், காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பாண்டிராஜ் - விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இதுவே என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் 'பசங்க', 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கதகளி', 'கடைக்குட்டி சிங்கம்', நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதனால் 'தலைவன் தலைவி' படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் காதல் மற்றும் குடும்ப கதைக்களத்தை கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் முதல் பாடலான 'பொட்டல முட்டாயே...' என்ற பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணனுடன் சுப்லாஷினியுடன் பாடியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், ‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. ‘ஆகாச வீரன்..’ என தொடங்கும் இந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில், விவேக் வரிகளில், பிரதீப் குமார் மற்றும் தீ ஆகியோர் பாடியுள்ளனர். மேலும், இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவருகிறது.