Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

'குட் பேட் அக்லி’ வெளியான சில மணி நேரத்தில் படக்குழு தலையில் விழுந்த இடி!

By nagalekshmi
10 Apr 2025, 07:56 PM
'குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான சில மணிநேரத்தில் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் திரிஷா, ரெடின் கிங்ஸ்லி, பிரசன்னா, யோகிபாபு, பிரியா வாரியர், சிம்ரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று (ஏப்.10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸையொட்டி அஜித் ரசிகர்கள் அவரது பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, தமிழ்நாட்டில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு வெளியானது. இப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த ஆதிக் ரவிச்சந்திரன் திரையரங்கில் தரையில் இருந்து படம் பார்த்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

இணையத்தில் லீக்கானதால் அதிர்ச்சி

அதுமட்டுமல்லாமல், 'குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸை நடிகர் ஷைன் டாம், ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில், படக்குழு தலையில் பேரிடி விழும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் காட்சி முடிந்ததும் முழு படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படக்குழு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.