Latest News

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By Christon
23 Mar 2026, 05:53 PM
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நீண்ட 6 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த முக்கியத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, 9 போலீசார் மீது கொலைக் குற்றம் சுமத்தியது. இவ்வழக்கின் விசாரணை மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி முத்துக்குமரன் இன்று இறுதித் தீர்ப்பை வாசித்தார். அப்போது, கைதான 9 போலீசாரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மருத்துவ அறிக்கை மற்றும் சிபிஐ-யின் திடுக்கிடும் தகவல்

தீர்ப்பின்போது நீதிபதி சில முக்கியக் குறிப்புகளைச் சுட்டிக்காட்டினார். உயிரிழந்த ஜெயராஜிற்கு இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், கம்பு மற்றும் கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதே மரணத்திற்கு நேரடி காரணம் என்று அரசு மருத்துவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதிபதி உறுதிப்படுத்தினார். மேலும், "அடித்துப் பழகுவதற்கு ஒரு தந்தை - மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை வைத்துப் பயிற்சி எடுத்துக் கொள்வோம்" என போலீசார் தங்களுக்குள் பேசிக்கொண்டதாக சிபிஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவலையும் நீதிபதி தீர்ப்பு வாசிக்கும்போது குறிப்பிட்டார்.

9 பேரும் குற்றவாளிகள்

நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரையும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் மற்றும் அதன் அளவு குறித்த அறிவிப்பு வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2020-இல் நடந்த இந்தச் சம்பவம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.