ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

By VASUKI
15 May 2025, 03:44 PM
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.
வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி, சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி கோடை காலமாக இருப்பதால் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக அகழி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபத்தை நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 31ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 தேதி தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று அங்கு தீபாராதனை நடத்தப்படும்.

பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். வருகிற 9 -ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும்.

அதனை தொடர்ந்து, ஜூன் 10 முதல் 12 ஆம் தேதி வரையில் அருளாளர் திருஞானசம்பந்தர் திருவிழாவும் நடைபெற உள்ளது. அவ்விழாவில் 12ஆம் தேதி அன்று திருஞானசம்பந்தர் திருநட்சத்திரத்தன்று தங்க பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்களின் நான்கு ஆவணி மூல வீதி புறப்பாடாகி இரவு 8 மணி அளவில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி மதுரை ஆதின மடம் சென்று, பின்னர் நான்கு சித்திரை வீதிகளில் சுற்றி உலா நடைபெற உள்ளது.

வைகாசி உற்சவத்தை முன்னிட்டு மே 31 முதல் ஜூன் 12ஆம் தேதி வரையில் திருக்கோயில் சார்பாகவும் உபய தங்க ரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சேவைகள் நடத்தப்படுவதில்லை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.