Kumudam News 24 X 7 AMP Article
ஆன்மிகம்

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலில் தைப் பூசத் தேரோட்டம்..!

By VASUKI
11 Feb 2025, 08:09 PM
திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் தைப் பூசத் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்கலந்துகொண்டு திருத்தேர்களை வடம் பிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பிரசித்திபெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 7-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது, தினந்தோறும் சுவாமிக்குஅபிசேகமும், சிறப்பு பூஜைகளும், திருவீதி உலாவும் நடந்தன.எட்டாம் தேதி, வள்ளி - தெய் வானை சமேத கந்த சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. விநாயகர் தேர் எனப்படும் சிறிய தேர் மற்றும் கந்தசாமி தேர் எனப்படும் பெரிய தேர்கள்பூக்களால் அலங்கரிக்கப் பட்டன. விநாயகர் தேர் மற்றும் வள்ளி-தெய்வானை சமேத கந்தசாமி தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பெரிய தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, நாமக்கல் உதவி ஆணையர் சுவாமிநாதன், தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பெரிய தேர் கோவிலை சுற்றி வந்து நிலை சேர்ந்தது. இவ்விழாவில், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முன்னதாக, தேர்களுக்கு முன்பாக, பக்தர்கள், இளநீர், பால், மயில் உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து காவடி ஆட்டம் ஆடினர்.

தைப்பூசத்தை முன்னிட்டு காளிப்பட்டியில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் குவிய தொடங்கினர். பக்தர்கள் அலகு குத்தியும், இளநீர்  காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர்.மூலவருக்கு பால், ,தயிர், இளநீர், பன்னீர் ,தேன்,கரும்பு சாறு, அபிஷேகம் நடைபெற்றது.பின்பு முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதி கரித்ததால்சாலை நெடுகிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட், பழங்கள், பால், டீ போன்றவற்றை வழங்கினர்.  கோயிலுக்கு முன்பு பஞ்சாமிர்தம்  வைத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் காவல்துறையினர் 250-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.