ஆன்மிகம்

தெப்ப மிதவையில் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை..!

By VASUKI
07 Feb 2025, 09:43 PM
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் மின்னொளியில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை உடன் அருள்பாலித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு இன்று தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில்  தங்கமயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். 

விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்ப திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்ப திருவிழா நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் இன்று காலை எழுந்தருளினார். 

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை உடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

இதே போல இரவில் மின்னொளியிலும் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வடத்தை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இழுத்தனர்.தெப்பம்  மிதவையில் வலம் வந்த சுப்பிரமணியசாமி தெய்வானை அம்பாள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.