Kumudam News 24 X 7 AMP Article
ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பூக்குழி திருவிழா கொடியேற்றம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

By VASUKI
18 Mar 2025, 11:13 AM
ஸ்ரீவில்லிபுத்தூரில்  பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நிகழ்ச்சியான இன்று கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.வருடந்தோறும் இக்கோவில் பங்குனி மாதத்தில் பூக்குழி இறங்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து பூ இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பெரியமாரியம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று முக்கிய வீதிகளின் வழியாக கொடி மரப்பட்டங்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் எடுத்துவரப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

பக்தர்கள் 12 நாள்கள் விரதம் இருந்து பூ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மேலும் பூக்குழி இறங்கும் திருவிழாவை முன்னிட்டு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதனை தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி பெரிய மாரியம்மன் திருத்தேரோட்டம் நடைபெறும்.1000 க்கும்  மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.பங்குனி மாதத்தில் 12 நாட்களும் பெரிய மாரியம்மன் கோவிலில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது