Kumudam News 24 X 7 AMP Article
ஆன்மிகம்

வரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

By nagalekshmi
15 Feb 2025, 07:29 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை மாதம் பௌர்ணமியை ஒட்டி 3-வது நாளான நேற்று (பிப். 14) வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து நீல பட்டு உடுத்தி, திருவாபரங்கள் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள்.

பின்னர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து ஆதிசேஷனின் அவதாரமான அனந்த சரஸ் திருக்குளத்தில் வாழைமரம், மா இலை தோரணங்கள் கட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருந்தேவி தாயார் உடன் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் எழுந்தருளி 3-வது நாளான நேற்று (பிப். 5) ஏழு சுற்றுக்கள் சுற்றி வந்தார்.

தை மாத பௌர்ணமியை ஓட்டி நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.