ஆன்மிகம்

ஆடிக் கிருத்திகை குவிந்த பக்தர்கள்.. கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம்!

By VASUKI
20 Jul 2025, 09:55 PM
ஆடிக் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஆடிக் கிருத்திகையை ஒட்டித் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் கடலில் புனித நீராடிப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மலைக்கோயிலில் அதிகாலை நடை திறக்கபட்டு சிறப்புப் பூஜைகள் செய்யபட்டது. படிபாதைகளில் உள்ள படிகளில் சூடம் ஏற்றிக் கொண்டே மலைக்கோயிலுக்கு சென்றும், காவடிகள் எடுத்தும் மலைக்கோயிலுக்கு சென்றனர்.

அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமான் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படைவீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடிக் கிருத்திகை பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருக கடவுளை வழிபட்டு வருகின்றனர். மூலவர் சுவாமிநாத சுவாமி தங்க கவச அலங்காரத்தில் வைர வேலுடன் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.