ஆன்மிகம்

கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்-கோவிந்தா...கோவிந்தா...முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

By Jayakumar
13 May 2025, 07:09 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உலகப்புகழ் பெற்ற அத்திவரதர் கோவில் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் ஆனது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடியேற்றத்துடன் தொடங்கி அனுதினமும் காலையிலும், மாலையிலும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களிலே எழுந்தருளி காட்சியளித்து வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்

அந்த வகையிலே இப்பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவமானது நடைபெறும்.அந்த வகையில் இன்று அதிகாலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகளானது செய்யப்பட்டு வண்ண, வண்ண மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தின் மீது எழுந்தருளி பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இப்பிரம்மோற்சவத்தினை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் கூட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருக்கின்றனர்.வரதராஜ பெருமாள் வீதி உலா வரும் பிரதான சாலைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழி நெடுகிலும் கூடி நின்று சாமி தரிசனம் செய்தும், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்தும் கோவிந்தா... கோவிந்தா... என முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

மேலும் பிரம்மோற்சவத்தையொட்டி பல்வேறு இடங்களிலும் ஏராளமானோர் அன்னபிரசாதங்களையும் வழங்கி வருகின்றனர். இந்த பிரம்மோற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரம் மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் எவ்வித குற்றச் சம்பவங்களும் நிகழாமல் இருப்பதற்காக பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதற்காக குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணித்துவரும் நிலையில், ஆங்காங்கே தற்காலிகமாக உயர் கோபுர கண்காணிப்பு கட்டப்பட்டு அங்கிருந்து காவல்துறையினர் கேமராக்கள் மூலம் காட்சிகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த பிரமோற்சவத்தை ஒட்டி அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவையும், தீயணைப்புத்துறை வாகனங்களும், மின்வாரியத் துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.