உலகம்

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

By VASUKI
05 Sep 2025, 09:28 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது, சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளும், ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கை, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான அதிகரித்து வரும் மோதலின் பின்னணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதன் மூலம், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி வழங்குவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக, இந்தியா மீது 50% வரி விதிப்பதாக அவர் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு, உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அழுத்தம் எனவும் அவர் விளக்கமளித்தார். இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரிவிதிப்பு அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குப் பிறகு, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் வ்லாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து சிரித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் மோடியும், புதினும் ஒரே காரில் மாநாட்டு வளாகத்திற்குச் சென்றதோடு, சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த கருத்தைப் பதிவிட்டுள்ளார். டிரம்ப்பின் உயர்மட்ட வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, மூன்று தலைவர்களின் சந்திப்பை தொந்தரவு என்று அழைத்த நிலையில், வெளியுறவு அமைச்சகம் இதற்குப் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.