உலகம்

Viral Video: ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.. 23 பயணிகள் பலியான சோகம்!

By Christon
26 Mar 2026, 11:04 AM
வங்கதேசத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வங்கதேசத்தின் ராஜ்பாரி அருகே உள்ள தவுலத்தியா படகு முனையத்தில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. பத்மா ஆற்றைக் கடப்பதற்காக 40 பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று, மிதவைப் பாலம் வழியாகப் படகில் ஏற முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு சிறிய படகு மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி ஆழமுள்ள ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது.

மீட்புப் பணிகளும் உயிரிழப்பும்

விபத்து நடந்தவுடன் சில பயணிகள் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால், பேருந்துக்குள் சிக்கிக்கொண்டவர்களில் இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான பலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள், இன்று காலை மீண்டும் தொடங்கின. நள்ளிரவு 11:30 மணியளவில் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்து முழுமையாக மேலே தூக்கப்பட்டது.

உயிர்பிழைத்தவர்களின் சோகம்

இந்த விபத்தில் நீந்தி கரை சேர்ந்த ஒருவர், தனது மனைவியும் குழந்தையும் கண்ணெதிரே தண்ணீரில் மூழ்கியதைக் கண்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது. விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆற்றைக் கடக்கும் பிரதான போக்குவரத்து முனையத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.