Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

உப்புக்கு மாற்றாக நச்சுப் பொருள்.. ChatGPT-யின் தவறான பரிந்துரையால் விபரீதம்!

By Christon
11 Aug 2025, 09:55 PM
ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தளமான ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய ஒரு நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஐ. கொடுத்த ஆலோசனை

வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவர்களின் தகவல்படி, உடல் நலம் மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் அடிக்கடி ஏ.ஐ.யை நம்பி வந்த அந்த நபர், சாப்பிடும் உப்புக்கு மாற்றாக வேறு ஏதாவது பொருள் இருக்கிறதா என்று ChatGPT-யிடம் கேட்டுள்ளார். அதற்கு ஏ.ஐ., ஒரு நச்சுப் பொருளான சோடியம் புரோமைடை (sodium bromide) பரிந்துரைத்துள்ளது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

இந்தத் தவறான ஆலோசனையை நம்பிய அவர், மூன்று மாதங்களாக அந்த நச்சுப் பொருளை உட்கொண்டுள்ளார். இதன் காரணமாக, அவருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏ.ஐ.யின் ஆலோசனையால் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நச்சுப் பொருளை உட்கொண்டதால், அந்த நபருக்கு மனக்குழப்பம் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், அக்கம் பக்கத்தினர் தனக்கு விஷம் கொடுத்துவிட்டதாகச் சந்தேகித்ததுடன், அதிக தாகம் இருந்தும் தண்ணீர் குடிக்க மறுத்துள்ளார். அவரது நிலைமை மோசமடைந்ததால், மூன்று வாரங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

நிபுணர்களின் எச்சரிக்கை

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உப்புக்கு மாற்றுப் பொருள் குறித்து ChatGPT-யிடம் மீண்டும் கேட்டுப் பார்த்தபோது, அது மீண்டும் சோடியம் புரோமைடை பரிந்துரைப்பது தெரியவந்தது. உடல்நலம் தொடர்பான ஆலோசனைகளுக்கு ஏ.ஐ. தளங்களை நம்ப வேண்டாம் என்றும், எப்போதும் மருத்துவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.