உலகம்

13 மாத குழந்தை கொடூரமாக கொலை – டெக்சாஸ் இளைஞருக்கு மரண தண்டனை

By Jayakumar
25 Sep 2025, 09:43 PM
13 மாத குழந்தையை "பேய் ஓட்டுதல்" என்ற பெயரில் அடித்துக் கொன்ற டெக்சாஸ் இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தனது காதலியின் 13 மாத குழந்தையை "பேய் ஓட்டுதல்" என்ற பெயரில் சித்திரவதை செய்து கொன்றதற்காக, டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயதான ப்ளைன் மிலாம் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

குழந்தை அடித்துக்கொலை

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ருஸ்க் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. ப்ளைன் மிலாமும், அவரது அப்போதைய காதலியான ஜெஸிக்கா கார்சனும் குழந்தைக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி, அதை வெளியேற்ற முயன்றனர்.

விசாரணையில், இருவரும் 30 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை கடுமையாகத் தாக்கியது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் உடலில் எலும்பு முறிவுகள், உடல் முழுவதும் காயங்கள் மற்றும் ரத்த கட்டுகளுடன் பலத்த காயங்கள் இருந்தன.

மரண தண்டனை

மிலாம், தான் குற்றமற்றவர் என்றும், தனது காதலிதான் குழந்தையைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், ஜெஸிக்கா கார்சன் தனியாக விசாரிக்கப்பட்டு, மிலாமுடன் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

மிலாமின் வழக்கறிஞர்கள், மரண தண்டனையை நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், நீதிமன்றங்கள் இதை நிராகரித்துள்ளன. இந்த ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் மிலாம் ஆவார். 13 ஆண்டுகளாக நிலுவையில் இந்த வழக்கில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.