Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

சொகுசு பயணக் கப்பலில் பயங்கர தீவிபத்து – உயிர்பிழைக்க கடலில் குதித்த பயணிகள்!

By VASUKI
20 Jul 2025, 08:21 PM
இந்தோனேசியா தலாவுத் தீவிலிருந்து மனாடோ நகரை நோக்கி 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் உயிர் பிழைக்கக் கடலில் குதித்த பயணிகளை மீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி பகுதியைச் சேர்ந்த தலாவுத் (Talaud) தீவிலிருந்து மனாடோ (Manado) நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பயணக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் உள்ள எஞ்சின் பகுதியிலிருந்து திடீரெனத் தீக்காற்றுடன் மாசு வெளியேறத் தொடங்கியது. பின்னர் கப்பலின் பின்பகுதியில் பெரும் அளவில் தீவிபத்து பரவி, தற்காப்புக்காகப் பயணிகள் பதற்றமடைந்து கடலில் குதிக்க தொடங்கினர்.

உயிர் பிழைக்க முயன்ற 280 பயணிகளும் மீட்பு கப்பல்களினதும் மீனவர்களினதும் உதவியுடன் கடலிலிருந்து கரைக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். சிலர் கடலில் நீண்ட நேரம் வலுக்கட்டாயமாகத் தங்கிய நிலையில் இருப்பது சிறிது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிபத்து ஏற்பட்டதும், அண்டைபகுதி கடலோர பாதுகாப்புப் படைகள் மற்றும் மீட்புப்படை வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள்குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

தீவிபத்துக்கான காரணம்பற்றித் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பக் குறைபாடா அல்லது எரிபொருள் கசியலா என்பது குறித்து துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தத் தீ விபத்துச் சம்பவம், நெடுந்தூர பயணக் கப்பல்களின் பாதுகாப்பையும், தரத்தையும் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.