Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

ஆப்கனில் உலகின் மிக வயதான மனிதர்...விசாரணையை தொடங்கிய தாலிபான்கள்

By Jayakumar
05 Apr 2025, 10:37 AM
ஆப்கானிஸ்தானில் 1880களில் பிறந்ததாக கூறப்படும் அகல் நசீர் 140 வயதுடைய உலகின் மிக வயதாக நபர் என கூறப்படுகிறார்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் வசிக்கும் அகல் நசீர் என்ற முதியவர், தான் 1880களில் பிறந்ததாகக் கூறுகிறார்.இருப்பினும் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.

வயதான நபர்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்கிய ஆப்கானியத் தலைவர் மன்னர் அமானுல்லா கானுடன் சேர்ந்து பணியாற்றியதாக கூறுகிறார்.

மேலும் தான் அரண்மனையில் மன்னர் அமானுல்லா கானுடன் இருந்தேன். அப்போது எனக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும். ஆங்கிலேயர்கள் மண்டியிட்டதாக கூறியது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது என நசீர் கூறியுள்ளார்.

சிறப்புக்குழு அமைப்பு

நசீர் பல தலைமுறைகளைக் கொண்ட குடும்பத்துடன் வசிப்பதாகவும், தான் உலகின் வயதான நபர் என்றும் கூறியுள்ளார். இதேப்போல் எனக்கு வயது 50 ஆகிறது. நான் வயதான தாத்தா மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக நசீர் பேரன்களில் ஒருவரான வஜீர் கூறியுள்ளார்.

உலகின் வயதான நபர் என்ற நசீரின் கூற்றுக்கு பதிலளித்துள்ள மாகாணத்தின் தாலிபான் செய்தித்தொடர்பாளர் முஸ்தாக்ஃபர் குர்பாஸ், “நசீரின் வயதை சரிபார்க்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அல்லது மதிப்பீடுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், அவரை உலகின் மிக வயதான நபராகப் பதிவு செய்ய நாங்கள் பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.

மிக வயதான நபர் என்ற பெருமை

நசீர் குறித்தான தகவல்கள் சரிபார்க்கப்பட்டால், இதுவரை உலகில் வாழ்ந்த மிக வயதான நபர் என்ற பெருமை அவர் பெறுவார். முன்னதாக 1875ல் பிறந்து 122 ஆண்டுகளுக்கு பிறகு 1997ல் காலமான ஜுன் கால்மென்ட் வயதான நபர் என்ற பெருமை பெற்றிருந்தார். அதேப்போல் உலகின் வயதான நபர் என்று ஒருவர் கூறுவது இது முதல் முறையல்ல.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தைச் சேர்ந்த தியோலிரா கிளிசேரியா பெட்ரோ டா சில்வா உலகின் வயதான நபர் என்று கூறினார். ரியோவில் உள்ள சிறிய நகரமான போர்சியுன்குலாவின் கிராமப்புறத்தில் மார்ச் 10, 1905 அன்று பிறந்ததால் தனது 120வது பிறந்தநாளைக் கொண்டாடியதாக பெட்ரோ டா சில்வா கூறியுள்ளார். இருப்பினும் கின்னஸ் அறிக்கையில், பெட்ரோ டா சில்வாவின் விண்ணப்பத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளது. ஏனெனில் உலகம் முழுவதும் வயதான மனிதர் என்று பலரிடம் இருந்து இதுபோன்ற விண்ணப்பம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.