உலகம்

நீதிபதியை விமர்சித்தால் நிதியுதவி.. எலான் மஸ்க் செய்த தரமான சம்பவம்

By nagalekshmi
24 Mar 2025, 06:48 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற நாட்களில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் நடவடிக்கைகள் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவரது உத்தரவுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் உடனான தொடர்பு குறித்து ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டொனால்ட் டிரம்ப், இதனை மறைப்பதற்காக  நடிகை ஸ்டார்மிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அவர் தற்போது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதால் டொனால்ட் டிரம்பிற்கு  அபராதமோ, தண்டனையோ விதிக்க விரும்பவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு மர்ம நபர்கள் சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக இருக்கும் நீதிபதிகளை விமர்சிக்கும் குழுக்களுக்கு தொழிலதிபர் மற்றும் ‘அரசு செயல் திறன்’ துறை தலைவரான  எலான் மஸ்க் நிதியுதவி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை அவர் 5 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நீதிபதிகளுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு தலா எட்டாயிரத்து 600 ரூபாயை எலான் மஸ்க் வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.