Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

By VASUKI
30 Jul 2025, 12:44 PM
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சர்வதேச அளவில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.8 ரிக்டர் அளவில் பதிவாகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நான்கு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருக்கக்கூடிய ஏராளமான உயர்ந்த கட்டிடங்கள் குலுங்கியது.

தொடர்ந்து கிழக்கு ரஷ்ய ஆளுநர், கடற்கரையிலிருந்து மக்களை வெளியேறுமாறும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் அவசர சேவைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது அங்கு இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்திப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

ரஷ்யாவின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான், ஹவாய் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பிறப்பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வானிலை நிறுவனம் இந்தச் சுனாமி கடலோர நகரங்களைத் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் ஹொக்கைட்டோ தாக்கிய சுனாமி அலை சுமார் 30 சென்டிமீட்டர் வரை உயரத்தை எட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அலைகள் மேலும் உயரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தள பக்கத்தில் மக்களைப் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஹவாய், அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைக்குச் சுனாமி கண்காணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானும் இதில் அடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், பல பகுதிகளிலிருந்து தங்களது குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேறினர். தற்போது மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், மீண்டும் சுனாமி அலைகள் எழும் அபாயம் இருப்பதால் கடலோர மக்களுக்கு உஷாராக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.