Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

அந்தமான் அருகே வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு!

By VASUKI
29 Jul 2025, 09:51 AM
அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் தீவுகளுக்கு அருகில் உள்ள வங்கக்கடலில் நள்ளிரவு நேரத்தில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு, அந்தமான் தீவிலிருந்து மேற்கு, தென்மேற்கு திசையில் சுமார் 62 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 என அளவிடப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தின் ஆழம் கடலுக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

இது நிலநடுக்கம் சக்திவாய்ந்ததக இருந்தாலும், கடலுக்கடியில் ஏற்பட்டு இருப்பதால் கடலோர மாவட்டங்களில் அதிர்வுகள் உணரப்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் (National Center for Seismology) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள்பற்றிய தகவல்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம், சுனாமி அபாயத்தை உருவாக்குமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றன. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், எதுவும் அறிக்கைகள் வந்தால் அதன்படி செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.