உலகம்

ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

By Christon
28 Nov 2025, 10:57 AM
ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை காரணமாக இந்தச் சோகமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

தை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் குடியிருப்பில் 8 பிளாக்குகள் உள்ளன. 2,000 வீடுகள் கொண்ட இந்த வளாகத்தில், சில மாதங்களாகப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. ஒரு பிளாக்கில் ஏற்பட்ட தீ, கட்டிடங்களின் வெளிப்புறத்தில் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்த மூங்கில் சாரக்கட்டு (Bamboo Scaffolding) வழியாக மிக வேகமாக மற்ற பிளாக்குகளுக்கும் பரவியது.

பலி எண்ணிக்கை உயர்வு

ஆரம்பத்தில் 4 பேர் பலியானதாகக் தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு தீயணைப்பு வீரர் அடங்குவார். மேலும், 76 பேர் படுகாயம் அடைந்திருப்பதுடன், 279 பேர் மாயமாகி இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டு 700-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றினர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

விசாரணை மற்றும் கைது நடவடிக்கை

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த விபத்து ஒரு கட்டிடத்தின் உள்ளே தொடங்கி, சாரக்கட்டு காரணமாக விரைவாகப் பரவியதாக ஹாங்காங் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. ஜன்னல்களைப் பாலியூரிதீன் நுரை (polyurethane foam) பயன்படுத்தி காற்றோட்டத்தைத் தடை செய்ததால் தீ வேகமாகப் பரவியது தெரிய வந்துள்ளது. இதற்குப் பொறுப்பான கட்டுமான நிறுவன அதிகாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரக் கோளாறு அல்லது வேறு தீப்பொருள் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்தத் தீ விபத்தில் பலியானோருக்கு அதிபர் ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.