உலகம்

மண்டை ஓட்டுடன் பில்லி சூனியம்..மிரண்டு போன மாலத்தீவு அதிபர்.. கைதான அமைச்சர்கள் பதவி பறிப்பு

By Kumudam News
29 Jun 2024, 09:25 PM
மாலத்தீவில் அதிபர் முகமது மொய்சுவுக்கு, அமைச்சர்கள் பாத்திமா ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஆதம் ரமீஸ் பில்லி சூனியம் வைத்ததாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிராமங்களில் சொந்தக்காரர்களுக்குள் சண்டை வந்து பிடிக்காமல் போனால் செய்வினை வைப்பார்கள். குடும்பம் கெட்டுப்போக வேண்டும் பிசினஸ் நொடிந்து போக வேண்டும் என்று மந்திரவாதியிடம் போய் செய்வினை வைப்பார்கள். மாலத்தீவு அதிபருக்கே பில்லி சூனியம் வைத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாலத்தீவு போலீஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.மேலும் இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷாம்னாஸ் மற்றும் ரமீஸ் இருவரும், முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலே மேயராக பதவி வகித்த காலகட்டத்தில், ​​மாலே நகர சபையின் உறுப்பினர்களாக அவருடன் பணியாற்றியுள்ளனர். அதிபருக்கு எதிரான நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.