Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிரஷென்னிகோவ் எரிமலை வெடிப்பு.. நிலநடுக்கத்துக்குப் பின் அதிர்ச்சி!

By Jayakumar
06 Aug 2025, 09:02 AM
ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, க்ராஷென்னினிகோவ் எரிமலை சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறியுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்துள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை, சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெடித்துள்ளது. கடந்த வாரம் இப்பகுதியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக இந்த எரிமலை வெடித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த எரிமலை வெடிப்பினால் இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லையென ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் அடிக்கடி நடந்தாலும், க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், எரிமலையின் உட்பகுதியில் உள்ள அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த எரிமலை வெடிப்பின்போது, சுமார் 6000 மீட்டர் உயரம் வரை சாம்பல் மேகங்கள் வானில் பரவியுள்ளன. இந்தச் சாம்பல் மேகங்கள் பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்து செல்வதால், அவை மனிதர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ரஷ்ய அரசு கூறியுள்ளது.

க்ராஷென்னினிகோவ் எரிமலை அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பம் மக்கள் அதிகம் வசிக்காத பகுதி என்பதால், இந்த எரிமலை வெடிப்பால் இதுவரை எந்தப் பெரிய பாதிப்புகளும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானப் போக்குவரத்துக்காக 'ஆரஞ்சு ஏவியேஷன் அலர்ட்' (Orange Aviation Alert) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் விமானப் போக்குவரத்து சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண நிகழ்வு, அப்பகுதியின் புவியியல் அமைப்பைப் பற்றி மேலும் ஆராய்வதற்கான வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனினும், நிலைமை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.