உலகம்

கனடா தேர்தல்: ஆட்சியை தக்க வைத்த ட்ரூடோ கட்சி.. இந்தியாவிற்கு சாதகமாகுமா?

By nagalekshmi
30 Apr 2025, 07:03 AM
கனடாவில் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி 7-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிரதமர் பதவியை விட்டு விலகுவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி (Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி சில நாட்களிலேயே நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இதையடுத்து கடந்த 28-ஆம் தேதி கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னியும், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரேயும் மோதினர்.

இந்நிலையில், கனடாவில் உள்ள மொத்தம் 343 சீட்டுகளில் 167 இடங்களில் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். பியர் பொய்லிவ்ரே 145 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துள்ளார்.

பெரும்பான்மை 172 என்ற நிலையில் மார்க் கார்னி குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் சிறுபான்மை ஆட்சியை நடத்துவார் என்று கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவு மோசமடைந்த நிலையில் மார்க் கார்னியின் ஆட்சி இதனை சரிசெய்யும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.