Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

Israel-Iran War : அதிகரிக்கும் பதற்றம்... 2000 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல் - ஈரான் போர்!

By nishika
05 Oct 2024, 01:13 PM
Israel-Iran War Update : இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Israel-Iran War Update : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை(Israel Attack) நிறுத்த மறுத்து வருகிறது. 

போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம்(Israel Army) மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான ஈரான் தற்போது இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபானான் மீதும் ஹிஸ்புல்லாக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் வெகுண்டு எழுந்தது. 

அதன்படி கடந்த அக். 1ம் தேதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்(Joe Biden), இஸ்ரேலுக்கு என்றும் துணை நிற்பதாகத் தெரிவித்தார். இதனை சிறிதும் எதிர்பாராத இஸ்ரேல் ராணுவம் ஸ்தம்பித்து போனது. இதற்கு பதில் தாக்குதலாக லெபனான் மட்டுமின்றி சிரியாவையும் தரைவழியாகத் தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள்(Iran Nuclear Weapons Site) மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஏமனில் ஹவுதி அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.