Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு.... நீதி கிடைத்துள்ளது... கமலா ஹாரிஸ்!

By nishika
18 Oct 2024, 02:51 PM
ஹமாஸ் தலைவரின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான யாஹ்யா சின்வார் மரணம் அடைந்து விட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி செய்திருக்கிறார். இதனை டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகையும் செய்தியாக வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பேசிய அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ், “ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம் அடைந்து உள்ளார் என இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. நீதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் நன்மை ஏற்பட்டுள்ளது. சின்வாரின் கைகளில் அமெரிக்காவின் ரத்தம் இருந்தது.

ஆனால் தற்போது, ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனநிம்மதிக்கான உணர்வு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறேன். கடந்த ஆண்டில், சின்வார் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிற தலைவர்களின் இருப்பிடம் பற்றி அறிய, இஸ்ரேல் வீரர்களுடன் இணைந்து, அமெரிக்க சிறப்பு நடவடிக்கை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடைய பணியை பாராட்டுகிறேன்.

அமெரிக்கர்களை படுகொலை செய்யும், அச்சுறுத்தும் அல்லது நம்முடைய படைகளை அச்சுறுத்தும் எந்தவொரு பயங்கரவாதிக்கும் நான் கூறுவது என்னவெனில், நாங்கள் உங்களை நீதியின் முன் நிறுத்துவோம்.

இஸ்ரேல், தன்னை பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது. இஸ்ரேலுக்கு விடுத்த ஹமாஸ் அமைப்பின் மிரட்டல் நீக்கப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி தெளிவான முன்னேற்றம் இன்று ஏற்பட்டு உள்ளது. ஹமாஸ் அழிக்கப்பட்டு, அதன் தலைமை நீக்கப்பட்டு உள்ளது.

இதனால் காசாவில் போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு வாய்ப்பை இந்த தருணம் நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. போர் நிச்சயம் முடிவுக்கு வரவேண்டும். இதனால், இஸ்ரேல் இஸ்ரேல் பாதுகாக்கப்படுவதுடன், பணய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். காசாவில் பாதிப்பு முடிவுக்கு வரும். பாலஸ்தீனிய மக்கள் தங்களுடைய கண்ணியம், பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சுய நிர்ணயம் செய்வதற்கான உரிமையை உணர்வார்கள்” என தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.