Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: 2022 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் தீர்ப்பு!

By VASUKI
12 Sep 2025, 06:55 PM
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அதன் முடிவுகளைஎதிர்த்துப் பல்வேறு வழிகளில் அவர் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுத் தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் அவரைக் குற்றவாளி என உறுதி செய்தது.

இந்தத் தீர்ப்பானது, பிரேசில் அரசியல் மற்றும் நீதி வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.