உலகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: 4.9 ரிக்டர் அளவில் பதிவு!

By VASUKI
17 Aug 2025, 09:26 AM
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான், கடந்த சில ஆண்டுகளாகவே பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதன் புவியியல் அமைப்பின் காரணமாக, அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூன்று முறை பூமி அதிர்ந்து, நிலநடுக்கம் ஏற்படுவதால், கடந்த சில வாரங்களாகவே ஆப்கானிஸ்தான் மக்கள் ஒருவித அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று இரவு 11:05 மணிக்கு, திடீரென 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்த தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

ஏற்கனவே, ஆகஸ்ட் 8 ஆம் தேதி 4.3 ரிக்டர் அளவிலும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி 4.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த மூன்றாவது நிலநடுக்கம் மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடர் நிலநடுக்கங்கள், ஏன் குறைவான இடைவெளியில் ஏற்படுகின்றன என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. நிலநடுக்கங்கள் பொதுவாகப் பூமியின் மேற்பரப்பிலிருந்து அதிக ஆழத்தில் ஏற்படும்போது, அவற்றின் தாக்கம் மேற்பரப்பை அடைவதற்குள் பலவீனமடைந்துவிடும். ஆனால், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த மூன்று நிலநடுக்கங்களும், 10 கிலோமீட்டர் போன்ற குறைவான ஆழத்திலேயே மையம் கொண்டிருந்ததால், அவை பூமியின் மேற்பரப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.