உலகம்

விரைவில் விண்வெளிக்கு பறக்கும் டிராகன் ப்ளை.. எலான் மஸ்க்கின் திட்டம்

By nagalekshmi
01 Dec 2024, 12:33 PM
2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமிக்கு இணையான வானிலை மற்றும் திரவம் உள்ள கிரகமாக சனியில் உள்ள பெரிய நிலவான டைட்டன் (Moon Titan) பார்க்கப்படுகிறது. அதாவது, 146 நிலவுகளைக் கொண்ட சனிக்கிரகத்தில் ஒரே ஒரு நிலவில் மட்டுமே பூமி போன்ற வானிலை இருப்பதாக நாசா கூறுகிறது. இதனை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 'டிராகன் ப்ளை' (Dragonfly mission) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

3.35 பில்லியன் செலவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் ஹெவி ராக்கெட்  ( Falcon Heavy rocket) மூலம் டைட்டன் நிலவில்  டிராகன் ப்ளையை ஏவவுள்ளது. இந்த திட்டமானது 2026-ஆம் ஆண்டு செயல்படுத்தவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 2028-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி அல்லது 25-ஆம் தேதியில் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து டிராகன் ப்ளை விண்வெளிக்கு ஏவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த டிராகன் ப்ளை, டைட்டனில் உள்ள மீத்தேன் கடல்கள், பனிக்கட்டிகள், கனிம வள குன்றுகள் ஆகியவற்றின் தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும். 

தட்டானை போன்று இருக்கும் இந்த டிராகன் ப்ளை, ஆறு வருடங்கள் டைட்டன் மேற்பரைப்பை ஆராயும் நிலையில், 2036-ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பும் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடப்பட்ட மார்ஸ் ஹெலிகாப்டர் (Mars helicopter) போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டைட்டன் நிலவில் பூமியில் இருப்பது  போன்று  வளிமண்டலம், மழை, ஏரிகள், பெருங்கடல்கள், பள்ளத்தாக்குகள், மலை முகடுகள், குன்றுகள் மற்றும் உயிர்களின் கட்டுமானத் தொகுதிகள் உள்ளன. இது ஒரு வித்தியாசமான வேதியியலின் அடிப்படையில் இயங்குவதாக கூறப்படுகிறது. இதனை ஆராய்வதற்காகவே நாசா இந்த முயற்சியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.